பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ்வாலா மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ்வாலா மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் கே கிராமத்தில் ஜீப்பில் இன்று சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சித்து மூஸ்வாலாவை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையும் படிக்க- ஐபிஎல் நிறைவு விழாவில் ஒலித்த தமிழ்ப் பாடல்கள்
உடனடியாக மூஸ்வாலாவை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் பலியானார். இச்சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பஞ்சாப் அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார். சித்து மூஸ்வாலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நேற்று திரும்பப் பெறப்பட்ட நிலையில் இன்று அவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், சீக்கிய குருக்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அந்த மாநில ஆம் ஆத்மி அரசு நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.