ஐபிஎல் நிறைவு விழாவில் ஒலித்த தமிழ்ப் பாடல்கள்
By DIN | Published On : 29th May 2022 07:23 PM | Last Updated : 29th May 2022 07:45 PM | அ+அ அ- |

கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் நிறைவு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியில் தமிழ் பாடல்கள் அதிக அளவில் இடம் பெற்றன.
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனமாடினர். அதேபோன்று ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் இசைக் கச்சேரியும் நடைபெற்றது.
இதில் இசைத் துறையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு பாடல்களைப் பாடினர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்தே மாதரம் என தமிழில் பாடி தனது இசைக் கச்சேரியைத் தொடங்கினார்.
அடுத்தடுத்து பல பாடல்களை அவர் பாடினாலும், மூன்று தமிழ் பாடல்கள் அந்த பாடல்களின் தொகுப்பில் இடம்பெற்றன. வந்தே மாதரம்.. எனும் ஏ.ஆர்.ரஹ்மானின் நாட்டுப் பற்று ஆல்பம் பாடல், காதலன் திரைப்படத்தின் முக்காலா முக்காபுலா.. பாடல், பாய்ஸ் திரைப்படத்தின் மாரோ மாரோ.. எனத் தொடங்கும் பாடல் என மூன்று தமிழ்ப் பாடல்கள் ஐபிஎல் நிறைவுவிழாவில் இடம்பெற்றது.
அதோடு மட்டுமல்லாமல், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு.. பாடலும் கச்சேரியில் பாடப்பட்டது. முன்னதாக, 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் நிறைவு விழாவில் வாத்தி கம்மிங்.. பாடலுக்கு பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடனமாடினார்.