கர்நாடகத்தில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக தில்லியில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்த தலைவர்களில் முக்கியமானவர் பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்.
பெங்களூரு காந்தி பவனில் கர்நாடக விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ராகேஷ் திகைத் இன்று பங்கேற்றார். அப்போது, மேடை அருகே வந்த ஒருவர் ராகேஷ் திகைத்தை அங்கிருந்த மைக்கை எடுத்து தாக்கினார். தொடர்ந்து மற்றொரு இளைஞர் ராகேஷ் மீது கருப்பு மையை வீசினார்.
இதையும் படிக்க | யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு
இதையடுத்து, அங்கிருந்த ராகேஷ் திகைத் ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதால் அசாதாரண சூழல் நிலவியது. இந்த சம்பவத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ராகேஷ் திகைத் கூறியதாவது, “இந்த நிகழ்விற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அரசுடன் கூட்டு சேர்ந்து தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்றார்.