குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்தார்.
மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 134-ஆக ஆனது. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மோா்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிடவிருக்கிறார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 4 லட்சமும் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் என ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்தார்.
மேலும் தற்போது 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்னும் காணாமல்போன 2 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து: பிரதமா் இன்று நேரில் ஆய்வு