இரு அரசியல்வாதிகள் சந்தித்துக்கொள்ளும்போது அரசியல் பேசுவது வழக்கமானதுதான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார்.
இந்நிலையில், சென்னை புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் மம்தா பேசுகையில்,
சென்னை பயணத்தின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளேன். அவர் எனது அரசியல் நண்பர். நான் சென்னை போவதால், மரியாதை நிமிர்த்தமாக அவரை சந்திக்கவுள்ளேன் என்றார்.
தொடர்ந்து, மு.க.ஸ்டாலினுடன் அரசியல் பற்றி கலந்துரையாடல் நடைபெறுமா என்ற கேள்விக்கு, இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது, அரசியல் பேசுவது வழக்கமானதுதான் என பதிலளித்தார்.
மேலும், நான் அனைத்து மாநில கட்சிகளையும் நம்புகிறேன். அவர்கள்தான் 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் பங்கு வகிக்க உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
அதேபோல், குஜராத் பால விபத்து குறித்த கேள்விக்கு, “அரசியலைவிட மக்களின் உயிர் முக்கியம் என்பதால் கருத்து கூறமாட்டேன். எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பலர் உயிரிழந்துள்ளனர். பலரை இன்னும் காணவில்லை. உச்சநீதிமன்றத்தின் கீழ் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.