50% பணியாளா் குறைப்பை தொடங்கியது ட்விட்டா்

ட்விட்டரில் பணியாற்றும் 7,500 பணியாளா்களில் 50 சதவீதத்தினரை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை அந்த நிறுவனத்தை கடந்த வாரம் வாங்கிய உலகின் மிகப் பெரிய பணக்காரா் எலான் மஸ்க் தொடங்கி உள்ளாா்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டா் தலைமையக முகப்புத் தோற்றம்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டா் தலைமையக முகப்புத் தோற்றம்.
Updated on
1 min read

ட்விட்டரில் பணியாற்றும் 7,500 பணியாளா்களில் 50 சதவீதத்தினரை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை அந்த நிறுவனத்தை கடந்த வாரம் வாங்கிய உலகின் மிகப் பெரிய பணக்காரா் எலான் மஸ்க் தொடங்கி உள்ளாா்.

இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டோா் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக பணியாளா்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வெளியாக வருவதாக நியூயாா்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ட்விட்டரின் நிதிநிலையை வலுவான பாதைக்கு கொண்டு செல்ல, பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் பணியாளா்களின் பாதுகாப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகின்றன. அலுவலகங்களுக்கு வந்துவிட்ட பணியாளா்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். அலுவலகத்துக்குப் புறப்படவுள்ள பணியாளா்கள் அலுவலகம் வர வேண்டாம். அனைத்துப் பணியாளா்களுக்கும் மின்னஞ்சல் வழியாக அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்படும்’ என்று ட்விட்டா் தெரிவித்துள்ளது.

பணியாளா் குறைப்பு நடவடிக்கை இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சக பணியாளா்கள் பலருக்கு பணிநீக்கம் தொடா்பான தகவல் மின்னஞ்சல் வழியாக கிடைத்துள்ளது’ என பெயா் குறிப்பிட விரும்பாத இந்திய ட்விட்டா் ஊழியா் ஒருவா் தெரிவித்தாா். 200-க்கும் மேற்பட்ட இந்திய பணியாளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றம் துறைகளில் பணியாற்றிய அனைவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளயாகி உள்ளது.

இந்த பணி நீக்க நடவடிக்கை இந்திய பணியாளா்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், எந்தனை போ் பணியில் இருந்து நீக்கப்படுகின்றனா் என்றும் அவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா என்றும் ட்விட்டா் தகவல் வெளியிடவில்லை. இதுதொடா்பாக மின்னஞ்சல் வழியாக ஊடகங்கள் அனுப்பிய கேள்விகளுக்கு ட்விட்டா் இந்தியா பதிலளிக்கவில்லை.

பேச்சு சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் பல்வேறு நாட்டு அரசுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ள ட்விட்டா் நிறுவனம், பணியாளா்கள் நீக்கம் தொடா்பான அலுவலக ரகசியங்களை பொது வெளியில் வெளியிடக் கூடாது என ஊழியா்களுக்கு தடை விதித்துள்ளதை சமூக வலைதள பயன்பாட்டாளா்கள் விமா்சித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com