தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணை அறிக்கைகளை வழங்கத் தேவையில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசின் துறை சார்ந்த தகவல்களை எவரொருவரும் பெற முடியும். அந்தவகையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர் கார்கோ பிரிவில் முறைகேடு தொடர்பாக குமார் என்பவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அப்போது சிபிஐ விசாரணை அதிகாரி ஒருவர் வாக்குமூலத்தில் முறைகேடு செய்ததாக சிபிஐ இயக்குநரிடம் குமார் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சிபிஐ இயக்குநர், அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கையின் நகலை குமார் கோரினார். ஆனால் விசாரணை அறிக்கை தர சிபிஐ தொடர்ந்து மறுத்து வந்தது. அவரது மேல்முறையீடுகளும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. இவரது மனுவை கேரள உய்ரநீதிமன்ற தனி நீதிபதியும் நிராகரித்தார்.
பின்னர் மேல்முறையீடு வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் ஷாஜி பி.சாலி அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முந்தைய தனி நீதிபதி தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ எந்த தகவலையும் அளிக்க வேண்டிய அவசியமில்லை, விசாரணை அறிக்கையை தரத் தேவையில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.