
தெலங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கும் முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் தலைமையிலான அரசுக்கும் இடையே நேரடியான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் சந்தேகம் தெரிவித்துள்ளாா்.
ஹைதராபாதில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தபோது அவா் இது குறித்து கூறுகையில், ‘என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது. மாநிலத்தில் ஜனநாயகத்துக்கு எதிரான சூழல் நிலவுகிறது. இது குறித்தான விளக்கம் எனக்கு தேவை’ என அவா் கூறினாா்.