புது தில்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 6 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.
182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் டிசம்பர் 1ஆம் தேதியும், 2-ஆம் கட்டமாக டிசம்பர் 5-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. குஜராத் சட்டப்பேரவைக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த நிலையில், முன்னதாக குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களின் பெயா்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான 6 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவதுகட்ட பட்டியலை இன்று அறிவித்துள்ளது.
இதில், தோராஜியிலிருந்து மகேந்ரிபாய் பட்லியா, கம்பாலியாவைச் சேர்ந்த முல்லுபாய் பெரா, குடியானாவில் இருந்து தெலிபெஹன் மால்தேபாய் ஒடேடாரா, கிழக்கு பாவ்நகரிலிருந்து செஜல் ராஜீவ் குமார் பாண்டியா, தெடியாபாடாவிலிருந்து ஹிதேஷ் தேவ்ஜி வாசவா மற்றும் சோரியாசிலிருந்து சந்தீப் தேசாய் ஆகியோர் பாஜகவின் இரண்டாவது பட்டியலில் இடம்பிடித்த வேட்பாளர்கள் ஆவார்.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.