மிசோரத்தில் கல்குவாரி சரிந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
மிசோரம் மாநிலம் ஹ்னதியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் தொழிலாளர்கள் வேலை செய்திகொண்டிருந்த போது திடீரென குவாரி சரிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவலறிந்து எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தற்போது வரை 8 தொழிலாளர்களின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 4 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.