ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரை சாமியார் வேடமிட்ட ஒருவர், யாசகம் கேட்பதைப்போன்று நடித்து, கத்தியால் வெட்ட முயற்சிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள துனி என்ற பகுதியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பி. சேஷகிரி ராவ் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் வீட்டு வாசலில் சாமியார் வேடமிட்ட ஒருவர் அவரைக் கத்தியால் தாக்குவதைப் போன்ற விடியோ வெளியாகியுள்ளது.
சாமியார் வேடமிட்ட ஒருவர் யாசகம் கேட்பதைப் போன்று சேஷகிரி ராவ்-இன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிலிருந்து வெளியே வந்த சேஷகிரி ராவ், அந்த சாமியார் வேடமிட்டவருக்கு யாசகம் வழங்கும்போது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்ட முயற்சித்துள்ளார்.
சேஷகிரி நிலைகுலைந்து விழும் வரை, அவரை கத்தியால் குத்தியுள்ளார். அலரல் சத்தம் கேட்டு சேஷகிரி வீட்டினர் வெளியே வருவதற்குள், சாமியார் வேடமிட்டவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளார்.
தலையிலும், கழுத்திலும் பலத்த காயமடைந்த சேஷகிரி ராவ், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.