மும்பையில் பாலியல் புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் காவல் துறை தரப்பில் எடுக்கப்படாததால், மனமுடைந்த இளைஞர் அரசு அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அந்த இளைஞர் 4 முறை கடிதம் எழுதியுள்ளார்.
அதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மனமுடைந்த இளைஞர், மும்பையிலுள்ள (மந்த்ராலயா) அரசு கட்டடத்தின் 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
எனினும், அவர் இடையில் கட்டப்பட்டிருந்த வலையில் சிக்கித் தவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பத்திரமாக இளைஞரை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இளைஞர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து அரசு அலுவலக கட்டடத்தில் இருந்த அதிகாரிகள் சிலர் கேள்வி எழுப்பினர்.
அப்போது தான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த இளைஞர் குறிப்பிட்டார்.