ராஜஸ்தானில் கடந்தாண்டை ஒப்பிடும்போது உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90.4 சதவீதம் அதிகரித்துள்ளது
முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற மறு ஆய்வுக்கூட்டத்தில்,
கரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டை விட இந்தாண்டு மாநிலத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர இந்தாண்டு செப்டம்பர் வரை 1.64 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ராஜஸ்தானுக்கு வருகை தந்துள்ளனர்.
மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவின் முக்கியத்துவம் பற்றி பேசிய கெலாட், இத்துறை பெரியளவில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. அதே நேரத்தில் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மாநிலத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது என்றார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலாசாரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ராஜஸ்தான் நாட்டுப்புறக் கலை விழாவைத் தனது அரசு விரைவில் ஏற்பாடு செய்யும் என்றார்.
ஜெய்ப்பூர் டவுன் ஹால் அருங்காட்சியகமாக மேம்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். இதற்காக, மாநில அரசு ரூ.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் அவர்.