தெலங்கானாவில் அரசு கல்லூரியின் ஆய்வகத்தில் இருந்து ரசாயன வாயு கசிந்ததால் 25 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரசு கஸ்தூர்பா கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து இன்று திடீரென ரசாயன வாயு கசிந்தது. இதனால் சுமார் 25 மாணவர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வாயு கசிவு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரியில் இருந்த அனைத்து மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதையும் படிக்க- திருவாரூர் மாவட்டத்துக்கு டிச.5-ல் உள்ளூர் விடுமுறை!
தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கல்லூரிக்கு விரைந்த தடயவியல் குழுவினர் எந்த வாயு கசிந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதனால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.