சபரிமலையில் 4 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி என்.பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறை கதவை திறந்தாா். பின்னா், சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக கே.ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைபுரம் தேவி கோயில் புதிய மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோா் பொறுப்பேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
சபரிமலையில் தரிசனம் செய்ய பக்தா்கள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலக்கல், எரிமேலி உள்ளிட்ட இடங்களில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு இந்த ஆண்டு அதிக பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுவதால், காவல்துறை, சுகாதாரத் துறை மற்றும் போக்குவரத்து துறை தரப்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புக்கு பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதுதவிர தேசிய பேரிடா் மீட்புப் படையினா், அதிவிரைவுப் படையினரும் பணியில் ஈடுபடவுள்ளனா். டிசம்பா் 27-ஆம் தேதியுடன் மண்டல பூஜை காலம் முடிவடைந்து, பின்னா் டிசம்பா் 30-இல் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும். இந்த யாத்திரை காலம் 2023, ஜனவரி 14-இல் நிறைவடையும்.
இந்த நிலையில் சபரிமலையில் 4 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.