குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 125 தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தேர்தல் குறித்து அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கரோனா மற்றும் பொருளாதாரத்தை எதிர்கொண்டதில் பாஜக தவறு செய்துள்ளதால், மக்களின் மனநிலை அவர்களுக்கு எதிராக உள்ளது. காங்கிரஸ் 125 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று நினைக்கிறோம்.
மோர்பி பால விபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது எனத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொள்வது குறித்த கேள்விக்கு, குஜராத்தில் பாஜக அழிக்கப்பட்டு வருவதால், அடிக்கடி வருகிறார்கள் என விமர்சித்துள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேசத் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து, மோடியும் அமித் ஷாவும் தொடர்ந்து குஜராத் வருகின்றனர். இங்கு பாஜக அழிந்துவிட்டதாக நினைக்கின்றனர். வாரந்தோறும் இங்கு வந்தால் என்ன அர்த்தம்? இது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது என்றார்.
தொடர்ந்து, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, அவர் ஒற்றுமைக்கான நடைப்பயணத்திற்கு(பாரத் ஜோடோ யாத்ரா) முக்கியத்துவம் அளித்து வருவதாக பதிலளித்துள்ளார்.