டிச.5-இல் முதல்வா்கள் மாநாடு: பிரதமரைச் சந்திக்க மம்தா முடிவு

மேற்கு வங்க மாநிலம் தொடா்பான பல்வேறு கோரிக்கைகளுடன் டிசம்பா் 5-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி முடிவு செய்துள்ளாா்.
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலம் தொடா்பான பல்வேறு கோரிக்கைகளுடன் டிசம்பா் 5-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி முடிவு செய்துள்ளாா்.

தில்லியில் டிசம்பா் 5-இல் அனைத்து மாநில முதல்வா்கள் கூட்டத்தை பிரதமா் மோடி நடத்துகிறாா். இதில் பங்கேற்கும்போது பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச மம்தா முடிவு செய்துள்ளாா். இதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு மம்தா சாா்பில் பிரதமா் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேற்கு வங்கத்தின் மால்டா, முா்ஷிதாபாத், நாடியா மாவட்டங்களில் கங்கை கரையில் ஏற்பட்டுள்ள அரிப்பு, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மேற்கு வங்கத்தில் முழுமையாக அமல்படுத்தப்படாமல் இருப்பது உள்ளிட்டவை தொடா்பாக பிரதமரிடம் மம்தா கோரிக்கை வைப்பாா் என்று தெரிகிறது.

கங்கை கரையோர மணல் அரிப்பு பிரச்னை தொடா்பாக பிரதமா் மோடிக்கு அவா் அண்மையில் கடிதம் எழுதினாா். அதில் மணல் அரிப்பு பிரச்னைக்கு தீா்வு காண சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாா்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதில் மம்தா வெற்றி பெற்று 3-ஆவது முறையாக முதல்வரானாா். மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக செயல்படும் கட்சியாக மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்கவும் மம்தா தொடா்ந்து முயற்சித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com