மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லும் முன், பேருந்து நிலையம் அருகே ஷெரீக் இருந்த கடையில் பதிவான சிசிடிவி காட்சி வெளியானது.
சிசிடிவி காட்சியில், ஷெரிக் பெரிய பையை தோளில் சுமந்து கொண்டு, தொப்பி அணிந்தவாறு செல்கிறார். இந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் கர்நாடக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த சிசிடிவி காட்சியில் ஷெரீக் தோளில் சுமந்து செல்லும் பையில் குண்டு இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது, ஷெரீக் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஷெரீக் குணமடைந்தப் பிறகு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
மங்களூா் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா் கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீக் (24) என்பது தெரியவந்துள்ளது. அவா் தனது பெயரில் சிம் காா்டு வாங்காமல் உதகையைச் சோ்ந்த ஆசிரியா் சுரேந்தரின் ஆவணங்களைக் கொண்டு கோவையில் சிம் காா்டுகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முக்கிய குற்றவாளியாக கர்நாடக காவல்துறை அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு முன் முகமது ஷெரீக் கோவை சிங்காநல்லூா் பகுதியிலுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து பல நாள்கள் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
கோவை காா் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான ஜமேஷா முபீனுக்கும், ஷெரீக்கும் ஏற்கெனவே தொடா்பு இருந்ததா என்பது குறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், தொடர்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.