புதுதில்லி: வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் 2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வேயில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் சென்னை ஐசிஎஃப்-இல் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2023 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், நடந்துகொண்டிருக்கும் உற்பத்தி நடவடிக்கைகள் வேகத்தைக் கருத்தில் கொண்டு, 75 ரயில்களை இயக்குவதற்கான தனது இலக்கை அரசாங்கம் எட்டுவது சாத்தியமில்லை எனத் தெரிகிறது.
காரணம் முன்பை விட குறைவாகவே இந்த ரயில்கள் தயாரிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு புதிய வந்தே பாரத் ரயிலிலும் அடுத்தடுத்து கிடைக்கும் சில புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்படுத்தல் வசதிகள் இந்த ரயில்களில் இணைக்கப்பட்டு வருவதால், இதன் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களை தயாரிப்பதற்கான செலவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
18 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே பாரத் ரயில், முதலில் ரூ.106 கோடியில் தயாரிக்கப்பட்டது. தற்போது, ரூ.110 கோடி முதல் ரூ.120 கோடியை எட்டியுள்ளது. புதிய வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டு கொண்டே வருவதால் செலவுத்தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஏழு முதல் எட்டு ரயில்கள் தயாரிக்க வேண்டும் வேண்டும் என்பது ரயில்வேயின் இலக்காக இந்த ரயில்களின் கட்டுமானம் விரைவுபடுத்தப்பட்டாலும், ரயில்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரதே ரயில்களையும், அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரயில்களையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு. அந்த இலக்கை எட்டும் வகையில், கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையிலும் வந்தே பாரத் ரயிகள் தயாரிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் இதுவரை ஐந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன, மேலும் டிசம்பரில் ஆறாவது ரயிலை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.