கேரளத்தில் மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்க்க பள்ளி மாணவர்கள் அனைவரும் குழுவாக சேர்ந்து தலைமையாசிரியருக்கு கொடுத்த விடுப்புக் கடிதம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஆர்ஜெண்டினா அணியைச் சேர்ந்த மெஸ்ஸியின் ரசிகர்களான பள்ளி மாணவர்கள், செளதி அரேபியாவுக்கு எதிரான மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்க்க விடுப்புக் கடிதம் எழுதி அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
''ஆசிரியர்களுக்கு பயந்து அவர்களிடம் சொல்லாமல், பள்ளியை கட் அடித்துவிட்டு படத்திற்கு அல்லது கிரிக்கெட் விளையாடச் சென்ற 90ஸ் கிட்ஸ் எங்க, லீவ் லெட்டர் கொடுத்துட்டு மெஸ்ஸி ஆட்டம் பார்க்க போர 2கே கிட்ஸ் எங்க'' என்று சமூக வலைதளங்களில் இந்த விடுப்புக் கடிதம் பேசுபொருளாகியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாட்டத்திலுள்ள பெரம்பரா பகுதியிலுள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர்கள் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்கள். உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 22ஆம் தேதி நட்சத்திர வீரர் மெஸ்ஸியினுடைய ஆர்ஜெண்டினா அணியும் செளதி அரேபியா அணியும் விளையாடின.
இந்தப்போட்டியில் மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்க்க பள்ளி மாணவர்கள் குழுவாக விடுப்புக் கடிதம் எழுதி அனைவரும் கையெழுத்திட்டு தலைமை ஆசிரியரிடம் வழங்கியுள்ளனர். அந்தக் கடிதத்தை கால்பந்தாட்டப் பிரியர் ஒருவர் சுட்டுரையில் பதிவிட்டு, கேரள சாலைகளை மெஸ்ஸி ஆளுகிறார் எனப் பதிவிட்டுள்ளார்.