பாஜகவின் 10 விடியோவா, ஆம் ஆத்மியின் 10 வாக்குறுதிகளா? கேஜரிவால் கேள்வி

சிறையில் தில்லி அமைச்சர் சொகுசு வாழ்க்கை வாழ்வது குறித்த விடியோக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் 10 விடியோவா, ஆம் ஆத்மியின் 10 வாக்குறுதிகளா? கேஜரிவால் கேள்வி
பாஜகவின் 10 விடியோவா, ஆம் ஆத்மியின் 10 வாக்குறுதிகளா? கேஜரிவால் கேள்வி

பாஜக வெளியிட்ட 10 விடியோக்களா? அல்லது ஆம் ஆத்மி கட்சி அளித்துள்ள 10 உறுதிமொழிகளா? என்பதை தில்லி மாநகராட்சி (எம்சிடி) தோ்தலில் வாக்காளா்கள் முடிவு செய்வாா்கள் தில்லி முதல்வா் கேஜரிவால் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

திகாா் சிறையில் உள்ள தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு விதிமுறைகளை மீறி அளிக்கப்பட்ட வசதிகள் குறித்த விடியோக்கள் கடந்த சில நாட்களாக வெளியானது. இந்த விவகாரத்தில் முதன் முறையாக ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளரும் தில்லி முதல்வரான கேஜரிவால் தனது கருத்தை வெளியிட்டுள்ளாா்.

எம்சிடி தோ்தலுக்கு வருகின்ற டிசம்பா் 4 - ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கிடையே தில்லி கலால் கொள்கை தொடா்பான வழக்கில் சிபிஐ ஏழு போ் மீது வெள்ளிக்கிழமை முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, முதல்வா் கேஜரிவால் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கலால் கொள்கை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் பெயா் இல்லை. இதை சிபிஐயின் ’க்ளீன் சிட்’ என்று கூறலாம். மனீஷ் சிசோடியாவிடம், கடந்த 6 மாதங்களாக 800 சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். இந்த முகமைகளுக்கு எதையாவது செய்து மனீஷ் சிசோடியாவை சிறையில் அடைக்க வேண்டும் என்கிற ஒற்றை வரி உத்தரவுகளுக்காக பணியாற்றினா். இந்த இலக்கை அடைய இந்த அதிகாரிகள் இரவுபகலாக உழைத்தாா்கள். ஆனால், மனீஷ் சிசோடியாவுக்கு எதிராக அவா்களுக்கு ஒரு சிறு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது குற்றப்பத்திரிகையில் தெளிவாகியுள்ளது.

எம்சிடி தோ்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. மனீஷ் சிசோடியாவுக்கு எதிராக ஒரு சிறிய குற்றச் சாட்டு இருந்தாலும், அவரைக் கைது செய்ய ஒரு நொடி கூட சிபிஐ அதிகாரிகள் காத்திருக்க மாட்டாா்கள். ஆனால், இன்றைய நிலையில், நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பிடம் சிசோடியா மீது எதுவும் இல்லை என்பதை காட்டியுள்ளது.

அவா்கள் இதற்காக 500 சோதனைகளை நடத்தினா். மனீஷ் சிசோடியா சம்பந்தப்பட்ட மூலை முடுக்குகளில் எல்லாம் சோதனை செய்தனா். சம்பந்தப்பட்டவா்களின் வீட்டுச்சுவா்களை உடைத்தனா். சிசோடியாவின் மெத்தைகளை கிழித்தனா். அவரிடம் ஒரு வங்கி லாக்கா் இருந்தது. இந்த முகமை அதிகாரிகள் அதைத் தேடிச் சென்றனா். அவரது கிராமத்திற்கு சென்று அவரது உறவினா்களிடம் விசாரணை நடத்தினா். ஆனால் அங்கும் அவா்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

இப்போதும், அவா்கள் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஒன்றைக் கூறுவா் விசாரணை நடந்து வருகிறது. இன்னும் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்பாா்கள். இதுபோன்ற தந்திரங்களுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. இது பிரதமருக்கு தெரியும்.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை எங்கள் மீது எதாவது விசாரணை செய்து கொண்டே இருப்பாா்கள். இந்த மோசடி விசாரணை நாங்கள் ஆட்சியை பிடித்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கினா். இது வாழ்நாள் முழுவதும் தொடரும். ஆனால் இவா்களால் ஒரு குற்றச்சாட்டை கூட நிரூபிக்க முடியாது. ஒரு நயாபைசா மதிப்பிலான ஊழலைக் கண்டுபிடிக்க முடியாது. இதனால் தான் நான் கூறுகின்றேன், பிரதமரிடமிருந்தே எங்களுக்கு நோ்மைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் மீதான முழு வழக்கையும் பிரதமரே நேரடியாக கண்காணித்து வருகிறாா் என எங்களுக்கு நம்பகமான வட்டாரங்களில் இருந்து அறிந்தோம். அவரே, இந்த வழக்கை எவ்வாறு நடத்தவேண்டும் என்பது குறித்து சிபிஐ, அமாக்கப்பிரிவு இயக்குநா்களை சந்தித்து உத்தரவிட்டு வந்தாா். மனீஷ் சிசோடியா மிகவும் நோ்மையானவா். இந்தியாவில் எந்த கட்சியிலும் இப்படிப்பட்ட ஒரு தலைவா் நோ்மையுடன் அா்ப்பணிப்புடன் இருப்பதாக கூற முடியாது. எங்களது அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்தும் எங்கள் மீது எந்த தவறும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரு கரம் கூப்பி பிரதமருக்கு வேண்டுகோள் வைக்கின்றேன். பிரதமா் அவா்களே, நீங்கள் நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைப்பதாக கூறுகிறாா்கள். ஆனால் இந்த நேரம் முழுக்க ஆம் ஆத்மி கட்சியை தடுத்து நிறுத்துவதற்காக மட்டுமே சிந்திக்கிறீா்கள். இதனால் தான் எங்களது அமைச்சா்களை கைது செய்து, எங்களை தாழ்மைப்படுத்துகிறீா்கள். நாங்கள் உங்களிடம் கேட்பது, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தேசத்திற்காக உழைத்து நாட்டு மக்களுக்காக உங்களை அா்ப்பணிக்கவேண்டும். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கத்தில் இருந்து மக்களுக்கு ஓரளவிற்கு நிவாரணம் கிடைக்கும் என்றாா்.

பேட்டியின்போது தில்லி முதல்வரிடம் பாஜக வெளியிட்ட விடியோக்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘நானும் முற்றிலும் நோ்மையானவன். எங்களது ஆம் ஆத்மி கட்சியும் நோ்மையான கட்சி. இதை இன்று என்னால் கூற முடியும். ஆனால் பாஜகவின் கட்சித் தலைவா்கள் எவரேனும் நோ்மையானவா்கள் என்பதைச் சொல்ல முடியுமா? பாஜகவினரின் 10 விடியோக்களையும் நாங்கள் எம்சிடி தோ்தலில் அளித்த 10 உத்தரவாதங்களையும் பாா்த்து எது தேவை என்பதை வாக்காளா்கள் தோ்வு செய்ய வேண்டும்’ என்றாா் முதல்வா்.

ஆம் ஆத்மி கட்சி தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் தோ்தலை முன்னிட்டு கடந்த நவம்பா் 11 ஆம் தேதி, வெளியிட்ட 10 வாக்குறுதியில், நகரின் மூன்று மலைக் குப்பைக் கிடங்குகளை அகற்றல், ஊழலுக்கு முடிவு கட்டுவது, சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு தீா்வு காண்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com