நாடு முழுவதும் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்கள் இருப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமூக ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில், 'மாதவிடாய் சுகாதார மேலாண்மை, பெண்களின் கல்விக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காததன் காரணமாக இந்தியாவில் 23 லட்சம் பெண்கள் பள்ளிப்படிப்பினை இடைநிறுத்தம் செய்துள்ளனர். அதனால் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்' என்று கோரி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை எடுத்துக்கொண்ட நீதிபதிகள், நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து 2023 ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஒண்ணுமே புரியல! குஜராத்தில் ஒரேமாதிரி வாக்குறுதிகளை அளித்த கட்சிகள்!