புதுதில்லி: வாடிக்கையாளர்கள் தங்கள் செல்லிடப்பேசிகளில் அழைப்பவரின் பெயரைத் திரையில் பார்க்கும் திட்டம் தொடர்பால டிராய் அனைத்து வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டுள்ளது.
இந்த முன்மொழிவை கட்டாயமாக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று மக்களிடம் டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.
வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரை செல்லிடப்பேசியின் திரையில் காட்சிப்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்றும் டிராய் கேட்டுள்ளது.
அதே வேளையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களின் அனுமதியை எவ்வாறு பெறலாம் என்பது குறித்து பங்குதாரர்களின் கருத்துக்களையும் கோரியுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், செல்லிடப்பேசியில், எண் சேமிக்கப்படாவிட்டாலும், அழைப்பை மேற்கொள்ளும் நபரின் பெயர் பயனாளரின் தொலைபேசியில் தெரியும்.
ஸ்பேம் அல்லது மோசடி அழைப்புகளைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என்று டிராய் கருதி வருகிறது. தற்போது, பயனர்கள் அழைப்பை மேற்கொள்ளும் நபர் அல்லது நிறுவனத்தின் பெயரை கண்டறிய ட்ரூ காலர் எனும் செயலியின் உதவியைப் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.