காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூரை ஆதரிப்பதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்தொடா்ந்து அக்டோபா் 19-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தோ்தலில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூரை ஆதரிப்பதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூரை ஆதரிக்கிறேன். சசி தரூரின் நவீனத்துவமான அணுமுறை பிரிவினைவாத அரசியலை எதிர்த்து போரிட உதவும். கட்சியை மக்களிடமும் சென்றடைய செய்வோம். வழக்கமான நடைமுறை உதவாது. கட்சியின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசர தேவை உள்ளது" என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சசி தரூர் நன்றி:
பொதுமக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதில் விழிப்புணர்வோடு இருக்கும் உங்களுக்கும் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட உள்ள பிரதிநிதிகள் மத்தியில் உள்ள மற்றவர்களுக்கும் தெரிவிப்பதாகவும், இது மாற்றத்திற்கான நேரம். சிந்தியுங்கள் என்று சசி தரூர் கூறியுள்ளார்.