மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கந்தாட குடி படத்தின் டிரைலர் இன்று வெளியானதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமாரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் ட்வீட் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் அப்பு இன்னும் வாழ்ந்து வருகிறார்.
அறிவு கூர்மையான ஆளுமையோடு, ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற திறமை படைத்தவராகவும் அவர் விளங்கினார்.
இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கந்தாட குடி, ஓர் சமர்ப்பணம். இந்த முயற்சிக்கு எனது நல்வாழ்த்துகள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம்தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவர் நடித்த 'கந்தாட குடி' திரைப்படம் வரும் அக்டோபர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.