உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முலாயம் சிங் யாதவ் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தார் என்றும், சாதாரண சூழலில் இருந்து வந்த முலாயம் சிங் யாதவின் சாதனைகள் அசாதாரணமானவை எனவும் திரெளபதி முர்பு குறிப்பிட்டுள்ளார்.
முலாயம் சிங் யாதவுடன் இருக்கும் புகைப்படங்களை பிரதமர் மோடி சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
இருவரும் முதல்வராக மாநிலங்களுக்கு சேவை செய்தபோது பலமுறை சந்தித்துப் பேசியுள்ளோம். அவருடன் நெருங்கிய தொடர்பு நீடித்தது. அவரின் பார்வைகளை அறிந்துகொள்ள எப்போதுமே ஆவல் இருக்கும். அவரின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
ராஜ்நாத் சிங் இரங்கல்
தனது பொதுவாழ்வில் பல பதவிகளில் பணியாற்றி நாடு, சமுதாயம், மாநில வளர்ச்சிக்கு பங்காற்றினார் முலாயம் என ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் இரங்கல்
முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதியின் தூணாக இருந்தவர். மிக நீண்ட போராட்டத்தின் முடிவாக அவரின் மரணம் அமைந்துள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்