அகர்தலா-குவாஹாத்தி-கொல்கத்தா சிறப்பு எக்ஸ்பிரஸ் மற்றும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
குடியரசுத் தலைவர், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுடன், தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள அகர்தலா ரயில் நிலையத்தில் வடகிழக்கு எல்லை ரயில்வேயின் இரண்டு ரயில்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரையில்,
அகர்தலா-கோங்சாங் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் அகர்தலா-கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை அகர்தலா ரயில் நிலையத்தில் இருந்து திரௌபதி முர்மு கொடியசைத்துத் துவக்கி வைத்தார். திரிபுராவை அசாம், மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூரை இந்த விரைவு ரயில் இணைக்கும். மேலும் வடகிழக்கில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில்,
திரிபுராவின் ரயில் இணைப்பை நாட்டின் மற்ற பகுதிகளுடன் மேம்படுத்துவதற்காக, குவாஹாத்தி-கொல்கத்தா-குவாஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு ஒருமுறை திரிபுரா தலைநகர் அகர்தலா வரை நீட்டிக்கப்படுகிறது.
இந்த விரைவு ரயில் 14 பெட்டிகளுடன் இயக்கப்படும். அதன் வழக்கமான இயக்கத்தின் போது, எக்ஸ்பிரஸ் ரயில் (அகர்தலா-கொல்கத்தா) ஒவ்வொரு புதன்கிழமையும் காலை அகர்தலாவிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் மதியம் கொல்கத்தாவை சென்றடையும். மறுபுறம், இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை அகர்தலா சென்றடையும்.
அகர்தலா முதல் ஜிரிபாம் வரை மணிப்பூரில் உள்ள கோங்சாங் வரையிலான ஜன் சதாப்தி விரைவு ரயில் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று முறை இயக்கப்படும். 110 கிமீ நீளமுள்ள ஜிரிபாம்-இம்பால் புதிய பாதை திட்டத்தின் கீழ் இந்தப் பகுதி புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக திரிபுரா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வருகை தந்துள்ளது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.