தில்லியின் முன்னாள் முதல்வர் மதன்லால் குரானா போன்ற தலைவர்களால் பாஜக உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக உருவாகியுள்ளது என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மதன்லால் குரானா நினைவாக நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஜெ.பி.நட்டா இதனை ரிவித்தார்.
தனது இந்த உரையில் ஜெ.பி.நட்டா கூறியதாவது: மதன்லால் குரானா போன்ற தலைவர்கள் அவர்களது கொள்கைகளில் இருந்து ஒரு போதும் விலகாமல் சிறப்பாக கட்சியினை வழிநடத்திச் சென்றனர். மக்களுக்காக கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். பாஜக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மதன்லால் குரானாவின் வாழ்வில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். மதன்லால் குரானா நிறைய அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். அவரைப் போன்ற தலைவர்களால் தான் பாஜக இன்று உலகின் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதிகாரத்தின் பின் ஓடாமல் உண்மையாக மக்களுக்காக உழைத்த மதன்லால் குரானாவின் வாழ்வினை நாம் ஊக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே அவரை நாம் சரியாக நினைவுகூறும் விதமாக இருக்கும் என்றார்.