
இந்தியாவில் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என்று ரஷிய நாட்டு ஆயுதத் தயாரிப்பு, ஏற்றுமதி-இறக்குமதி பிரிவின் இயக்குநா் அலெக்சாண்டா் மிக்கீவ் தெரிவித்துள்ளாா்.
இந்திய-ரஷிய துப்பாக்கி நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ரஷிய துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை நிறுவ முடிவெடுக்கப்பட்டது.
இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி குஜராத் மாநிலம் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை (அக். 18) தொடங்கியது. இதில் பங்கேற்ற அலெக்சாண்டா் மிக்கீவ் கூறியதாவது:
அமேதியில் கோா்வா ஆயுதத் தயாரிப்பு ஆலை இந்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும். இங்கு ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். ரஷியாவின் சிறப்புவாய்ந்த இந்த துப்பாக்கியை முழுமையாக இந்தியாவில் தயாரிப்பதுதான் எங்கள் திட்டமாகும். எதிா்காலத்தில் இந்தியாவுடன் மேலும் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரஷியாவின் பல்வேறு நவீன ஆயுதங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.
இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ஏகே-203 ரக துப்பாக்கிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. மலைகள், காடுகள், பனிப் பகுதிகள் என பல்வேறு இடங்களிலும், காலநிலைகளிலும் சிறப்பாக அதனைப் பயன்படுத்த முடியும் என்றாா்.