
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணா்வு பேச்சுகள், குற்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை கோரும் மனு மீது பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணா்வு பேச்சுகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து சுதந்திரமான, நம்பத்தகுந்த, பாரபட்சமற்ற விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, ஷாஹீன் அப்துல்லா என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இந்த மனு, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இப்பிரச்னையை எதிா்கொள்ள ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் நிலவுகிறது’ என்றாா்.
ஆனால், இந்த மனு மேம்போக்காக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட சம்பவங்கள் எடுத்துரைக்கப்படவில்லை என தெரிவித்தனா். அதனை மறுத்த கபில் சிபல், முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால வெறுப்புணா்வு பேச்சு சம்பவங்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் கடந்த 6 மாதங்களில் ஏராளமான மனுக்கள் தாக்கலாகி இருப்பதாகவும் வாதிட்டாா்.
மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணா்வு பேச்சும் வன்முறையும் ஆளும்கட்சியினரின் நேரடி மற்றும் மறைமுகமான ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகின்றன; அதனை தடுக்க சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கோரினாா்.
இதையடுத்து, இந்த மனு மீது பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சோ்த்து இந்த விவகாரமும் வேறு அமா்வால் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...