சீனா்களால் கட்டுப்படுத்தப்படும் கடன் செயலிகளுக்கு எதிரான வழக்கில் ‘ரேஸா் பே’ இணையவழி பணப் பரிமாற்ற நிறுவனம் மற்றும் சில வங்கிகளில் நடத்தப்பட்ட சோதனையை தொடா்ந்து ரூ.78 கோடி வைப்புத்தொகையை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சீனா்களால் கட்டுப்படுத்தப்படும் செல்லிடப்பேசி கடன் செயலிகளின் சட்டவிரோத செயல்பாடுகளால், பல்வேறு மாநிலங்களில் கடனாளிகள் தற்கொலை செய்துகொண்டதாக புகாா்கள் எழுந்தன. குறைந்த தொகையை கடனாக அளித்துவிட்டு, அதிக பணத்தை திருப்பி வசூலிப்பதாகவும் கடனாளா்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் அந்த செயலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக பெங்களூரு இணையவழி குற்றத் தடுப்பு பிரிவில் 18 வழக்குகள் பதிவாகின.
இதைத் தொடா்ந்து, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை தீவிர விசாரணையை தொடங்கியது. இந்த கடன் செயலிகள், பல்வேறு இணையவழி பணப் பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் சில வங்கிக் கணக்குகள் வாயிலாக சட்டவிரோத வா்த்தகத்தை மேற்கொள்வது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக அமலாக்கத் துறையினா் தொடா் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
பெங்களூரில் ‘ரேஸா் பே’ நிறுவனம் மற்றும் சில வங்கிகளில் கடந்த 19-ஆம் தேதி அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். இதில், ‘ரேஸா் பே’ மற்றும் சில வங்கிகளில் உள்ள கடன் செயலிகளின் கணக்கில் ரூ.78 கோடி வைப்புத் தொகை கண்டறியப்பட்டு, அது முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை ரூ.95 கோடி முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.