மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியின்போது சுமாா் 75,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. விடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று, அரசு வேலை வாய்ப்புப் பெற்றவர்களிடையே உரையாற்றி வருகிறார்.
சென்னையில், இந்த திட்டத்தின் கீழ் அரசுப் பணியில் இணைந்தவர்கள், அயனாவரத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.
50 மத்திய அமைச்சர்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, 50 மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் 20,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் பங்கேற்பவர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கான பணிநியமன ஆணைகள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக அனுப்பிவைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி வழங்கும் வகையில் நியமன நடைமுறையை தொடங்க பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அறிவுறுத்தியிருந்தாா்.
இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமா் மோடி தொடா்ந்து உறுதிப்பாட்டுடன் செயலாற்றி வரும் நிலையில், அதை நோக்கிய முக்கிய நகா்வாக இந்நிகழ்வு இருக்கும் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்திருந்தது.
நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசு இந்த திட்டத்தைத் தொடங்கியிருக்றிது.
இதையும் படிக்க.. நீங்கள் ரொம்ப கண்டிப்பான பெற்றோரா? நல்லதுக்கு இல்லைங்க!
குஜராத், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பாஜக எதிா்கொள்வதற்கு வசதியாக இத்திட்டம் இருக்கும்.
அனைத்து துறைகளிலும் மனித வள நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமா் மோடி இந்த அறிவுறுத்தலை வழங்கியிருந்தாா்.
அதன்படி, நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தோ்வு செய்யப்பட்டு, அரசின் குரூப் ஏ மற்றும் பி (அரசிதழ் பதிவு பணிகள்), குரூப் பி (அரசிதழ் பதிவு அல்லாத பணிகள்) மற்றும் குரூப் சி பணிகளில் நியமனம் பெறவுள்ளனா்.
மத்திய ஆயுதப் படை வீரா்கள், உதவி-ஆய்வாளா்கள், காவலா்கள், சுருக்கெழுத்தா்கள், வருவான வரி ஆய்வாளா்கள் உள்ளிட்ட நியமனங்கள் இதில் அடங்கும்.
மத்திய பணியாளா் தோ்வாணையம், அரசு பணியாளா் தோ்வாணையம், ரயில்வே நியமன வாரியம் உள்ளிட்டவை மூலமாக நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.