கொச்சி: மனித வயிற்றுக்குள் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வரும் மனித மூளையின் திறன் அதோடு நின்றுவிடுமா.. என்ன? விதவிதமாக யோசிக்கிறார்கள். என்ன ஒரு சில இடங்களில் சிக்கிவிடுகிறார்கள். அப்போதுதான் அவர்களது மூளையின் திறன் வெளிஉலகத்துக்குத் தெரிய வருகிறது.
திரிசூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தங்கப் பசையை ஈரமான துண்டில் சுற்றிக் கொண்டு வந்த போதுதான் அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
இதையும் படிக்க.. நீங்கள் ரொம்ப கண்டிப்பான பெற்றோரா? நல்லதுக்கு இல்லைங்க!
ஃபஹத் (26) என்ற நபர், அக்டோபர் 10ஆம் தேதி துபையிலிருந்து கொச்சி வந்த போது பிடிபட்டார். அவரது உடைமைகளில் சில ஈரத் துண்டு ஒன்று கவரில் போடப்பட்டிருந்ததைப் பார்த்த சுங்கத் துறையினர், அது பற்றி கேட்டனர். அதற்கு தான் விமான நிலைய கழிப்பறையில் குளித்ததாக பதிலளித்தார். இதையடுத்து, மற்றொரு பையிலும் மூன்று ஈரத் துண்டுகள் இருந்ததால் சுங்கத் துறையினருக்கு சந்தேகம் வலுத்தது.
பிறகென்ன செய்வது, அந்த ஈரத் துண்டுகளை வெளியே எடுத்த போது, அதற்குள் தங்கப் பசை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, தங்கத்தை உருக்கி, அதற்குள் துண்டைப் போட்டு எடுத்துவிடுகிறார்கள். அந்த துண்டுக்குள் தங்க துகள்கள் ஒட்டிக்கொள்கின்றன. பிறகு ஒரு வேதியியல் பொருளைப் பயன்படுத்தி தங்கத்தைத் தனியாகப் பிரித்துவிடுகிறார்கள் என்று சுங்கத் துறை அதிகாரி கூறினார்.
இதுபோன்று கடந்த மாதம் ஒருவர் பிடிபட்டார். அவர் தான் வைத்திருந்த மரப்பெட்டிக்குள் தங்க முலாம் கொண்டு பெயிண்ட் போல அடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்.
அண்மையில் வயிற்றுக்குள் தங்கத்தை வைத்துக் கடத்தி வந்தால் பிடிபட்டுவிடுகிறார்கள் என்பதால், விதவிதமாக தங்கக் கடத்தல் நடந்து வருகிறது.
எந்த பழைய முறையையும் கடத்தல்காரர்கள் நீண்ட நாளுக்குப் பயன்படுத்துவதில்லை. ஆனால், வயிற்றில் வைத்து தங்கத்தைக் கடத்தி வருவது மட்டும் அவ்வப்போது நடப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.