ஒரு பொய்யான செய்தி கூட நாட்டில் மிகப் பெரிய பிரச்னையை உருவாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பொய்யான செய்திகள் பெரிதாகி நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறுவதை தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு சரி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு பிரச்னைகளை சரிசெய்வது தொடர்பான அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் பங்குபெறும் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரசிகர்கள் ஏமாற்றம்: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம்
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்களுக்கு செய்திகள் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மக்கள் ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்பாக அவர்கள் பகிரும் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டும். ஒரு செய்தியை பார்த்த உடனே நம்பிவிடாமல் அந்த செய்தி குறித்து ஆராய வேண்டும். பின்னர், ஒரு முறைக்கு பத்து முறை படித்து உண்மை என்று தெரிந்தால் மட்டுமே செய்தியைப் பகிர வேண்டும். ஒரு செய்தி உண்மையா அல்லது பொய்யானதா என அறிவதற்கு ஒவ்வொரு தளத்திலும் கருவிகள் உள்ளன. நீங்கள் ஒரு செய்தியை வெவ்வேறு தளங்களில் படிக்கும்போதும் உங்களுக்கு செய்தியின் தன்மையில் உள்ள மாற்றம் தெரியும். சமூக ஊடகங்களில் வலம் வரும் பொய்யான செய்திகளை பகிர்வதற்கு முன்னதாக ஒருவர் பலமுறை யோசிக்க வேண்டும். இதுபோன்ற பொய்யான செய்திகளின் பரவலைத் தடுக்க நாம் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்த வேண்டும் என்றார்.