தமிழ்த் திரைப்படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று கூறி வடிவேலு பலரையும் சிரிக்க வைத்திருப்பார்கள். ஆனால், மத்தியப் பிரதேச மாநிலத்திலோ, பிரதமரின் வீடு கட்டம் திட்டத்தின் கீழ் கட்டிய 8 வீடுகளை காணவில்லை என்று மக்களை அழவைத்திருக்கிறார்கள்.
சட்னா மாவட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டிய வீடுகளை 15 நாள்களுக்கு முன்பு தான் பிரதமரும், மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானும் காணொலி காட்சி வாயிலாக பயனாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க.. சென்னைக்கு சம்பவம் காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டிய 8 வீடுகளை காணவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த வீடுகள் காணாமல் போனது 2017 - 18ஆம் ஆண்டு வாக்கில் என்று கூறப்படுகிறது. அதாவது, சட்னா மாவட்டம் ராஹிக்வாரா பஞ்சாயத்துக்கு உள்பட்ட இடத்தில் இந்த காணாமல் போன வீடுகள் கட்டப்படவேயில்லை. வெறும் காகிதத்தில் மட்டும் வீடுகள் கட்டப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
தற்போது வீடுகள் காணாமல் போனதால் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டவர்களின் பெயர்களில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் இருக்கிறதா என்ற ஆய்வு தொடங்கியிருக்கிறது.
ஒரு கிராமத்திலிருந்து வெளியேறியவர்கள் பெயர்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அதனை மோசடி செய்திருப்பதும், இது வெளியே தெரியாது என்று அதிகாரிகள் நினைத்திருந்த நேரத்தில், ஒருவர் தனது பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு அதில் பணம் வரவு மற்றும் செலவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து 8 வீடுகள் காணாமல் போன சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.