மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில், மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத்தின் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டிற்காக தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தொங்கு பாலம் பழுந்தடைந்த நிலையில், புனரமைக்கப்பட்டு கடந்த 26 ஆம் தேதி மீண்டும் மக்களின் பயன்பாட்டு வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தொங்கு பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 60 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது.
பாலம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அதன் மீது 500 பேர் வரை நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 400க்கும் மேற்பட்டோர் பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கினர், சிலர் நீச்சல் அடித்து வெளியே வந்தனர். இருப்பினும் ஏராளமானோர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பக்கத்தில் உள்ள பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர், மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு குஜராத் அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதோடு, மத்திய அரசு சார்பில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், மாநில அரசின் சார்பில் தலா ரூ.4 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து ஆற்று நீரில் சிக்கியவர்கள் உயிருக்கு மூச்சுத் திணறுவதை பார்க்கும் போது பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.