மும்பை: அதிகாரப்பூர்வ அரசு ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலையம் தடைசெய்யப்பட்ட இடம் அல்ல; எனவே, காவல் நிலையத்துக்குள் விடியோ, புகைப்படம் எடுக்கலாம். அது குற்றமாகாது எனக் கூறி உபாத்யாய் மீதான வழக்கை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் நாக்பூர் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
மார்ச் 2018 இல் காவல் நிலையத்திற்குள் விடியோ எடுத்ததற்காக, மகாராஷ்டிரம் மாநிலம், நாக்பூரை சேர்ந்த ரவீந்திர உபாத்யாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இதுதொடர்பாக உபாத்யாய் மீது பக்கத்து வீட்டுக்காரர் வார்தா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து உபாத்யாய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து உபாத்யாய் தனது மனைவியுடன் காவல் நிலையத்துக்கு வந்தார். விசாரணையின் போது, உபாத்யாய் அதை தனது செல்போனில் விடியோ எடுத்தார்.
இதையும் படிக்க | உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்டது இந்திய பாதுகாப்புத் துறை!
இதனை பார்த்த காவலர், காவல் நிலையத்துக்குள் விடியோ எடுப்படு, அரசு ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் என்று உபாத்யாய் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதிகள் மணீஷ் பிதாலே மற்றும் வால்மீகி மெனேசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், உபாத்யாய் மீதான வழக்கை ரத்து செய்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது: அரசு தடைசெய்யப்பட்ட இடங்களில் உளவு பார்ப்பது தொடர்பாக அரசு ரகசிய பாதுகாப்பு சட்டப் பிரிவு 3 மற்றும் பிரிவு 2(8) முக்கிய இடங்கள், தடை செய்யப்பட்ட இடங்கள் என முழுமையாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற இடங்களில் உளவு பார்ப்பது, புகைப்படம், விடியோ எடுப்பது குற்றமாகும். ஆனால், காவல்நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக அரசு ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட இடமாக குறிப்பிடப்படவில்லை.
மேலும், "அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் பிரிவு 2(8) இல் வரையறுக்கப்பட்டுள்ள 'தடைசெய்யப்பட்ட இடம்' என்பதன் வரையறை பொருத்தமானது. இதுவொரு முழுமையான வரையறை, குறிப்பாக காவல்நிலையம் 'தடைசெய்யப்பட்ட இடம்' என்று வரையறையில் குறிப்பிடப்படவில்லை."
எனவே, மேற்கூறிய விதிகளின்படி, காவல் நிலையத்துக்குள் விடியோ, புகைப்படம் எடுக்கலாம். அது குற்றமல்ல எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட உபாத்யாய்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட குற்ற வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.