புதுதில்லி: உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட அரசுத் துறை என்ற பெயரை இந்திய பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது. அதேநேரத்தில், ராணுவத் துறைக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது இந்தியா.
உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட அரசு துறைகள் பற்றிய விவரத்தை ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஸ்டேட்டிஸ்டா’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலின்படி, உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட அரசுத் துறை என்ற பெயரை இந்திய பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில், மொத்தம் 29 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கு சமமானதாகும்.
ராணுவ வீரர்கள், நிர்வாகப் பிரிவு ஊழியர்கள், காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் என, அனைத்து பிரிவு ஊழியர்களும் இதில் அடங்குவர்.
29 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்களுடன் அமெரிக்கா பாதுகாப்புத் துறை இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு காச நோய்: உலக சுகாதார மையம்!
சீன ராணுவம் 25 லட்சம் ஊழியர்களுடன் 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் வரிசையில், உலகில் எந்த நிறுவனத்திலும் வால்மார்ட்டை விட அதிக ஊழியர்கள் இல்லை. அமெரிக்க சில்லறை வணிக நிறுவனத்திடமிருந்து சமீபத்திய தகவல்படி, உலகில் வால்மார்ட் நிறுவனம் 23 லட்சம் ஊழியர்களை பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக அமேசான் நிறுவனத்தில் 16 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
செலவு விவரம்: 2021 ஆம் ஆண்டில் உலக அளவில் ராணுவத் துறைக்கு ஒதுக்கப்படும் செலவுத் தொகை 2.113 லட்சம் கோடி.
அதன்படி, உலக அளவில் ராணுவத் துறைக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. தொடர்ந்து பிரிட்டன், ரஷியா அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ரஷியா ஆகிய ஐந்து நாடுகள் ராணுவத் துறைக்கு 62 சதவீதம் செலவிடப்படுகிறது.