புது தில்லி: நொய்டாவில் இரட்டைக் கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்ட இடத்தில் புதிதாக குடியிருப்புக் கட்டடத்தைக் கட்ட சூப்பர்டெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை, புதிய குடியிருப்புக் கட்டடத்துக்கு அனுமதி தரப்படவில்லையென்றால், அந்த இடத்துக்கான தொகை மற்றும் இதர செலவினங்களை இழப்பீடாக அளிக்க கோரவிருப்பதாகவும் நிர்வாகி ஆர்.கே. அரோரா கூறியுள்ளார்.
இதையும் படிக்க.. பொய்யாக பாஜக பகிர்ந்த விடியோ.. பழனிவேல் தியாகராஜன் கிண்டல்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, நொய்டாவில் 100 மீட்டர் உயரமிருந்த அபெக்ஸ் மற்றும் சியானி என்ற இரட்டைக் கோபுரங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெடிபொருள்கள் வைத்து தகர்க்கப்பட்டன.
இந்த நிலையில், இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் புதிய குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை நாங்கள் தாக்கல் செய்யவிருக்கிறோம் என்றார் அரோரா. எப்படி உங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்ற கேள்விக்கு? நாங்கள் திட்ட அறிக்கையை அளிப்போம். அதன்பிறகு அதிகாரிகளின் கையில் இருக்கிறது. இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.