பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை திங்கள்கிழமை (செப். 5) வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க உள்ளூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதனிடையே, ‘மடாதிபதியிடம் சட்டத்தின்படி விசாரணையை மேற்கொள்ள போலீஸாருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது’ என்று மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
அதன்படி, சித்ரதுர்காவில் உள்ள மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மடாதிபதியிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் தொடர்புடைய நான்காவது குற்றவாளியான மடத்தின் செயலாளர் பரமசிவய்யா மற்றும் இளைய மடாதிபதியின் முன்ஜாமீன் மனுக்கள் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கா்நாடக மடாதிபதிக்கு செப். 5 வரை போலீஸ் காவல்