விசாகப்பட்டினத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 8ஆண்டுகள் வரை நிலைநிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது. போா்க் கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும். இந்தக் கப்பலில் நூறுக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், இயந்திரங்களும் ஏராளமாக பொருத்தப்பட்டுள்ளன. 1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே போா் விமானங்கள், கமோவ் - 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் - 60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும்.
இதையும் படிக்க- நடராஜர் கோயிலில் செப்.9-ல் மகா ருத்ர மகாபிஷேகம்
அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும். கடந்த வெள்ளிக்கிழமையன்று இக்கப்பலை பிரதமா் நரேந்திர மோடி கொச்சி கடற்படைத் தளத்தில் இந்தியக் கடற்படையில் இணைத்து வைத்தார். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 8 ஆண்டுகள் வரை நிலைநிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கப்பலை நிறுத்துவதற்காக இந்திய கடற்படை கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் புதிய தளம் பயன்பாட்டுக்கு தயாராகும் வரை போர்க்கப்பல் காட்டுப்பள்ளியில் தற்காலிகமாக நிலைநிறுத்தப்படும் எனத் தெரிகிறது.