பாட்னா: செவ்வாயன்று நள்ளிரவு பிகார் தலைநகர் பாட்னாவில் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் கதவுகளைத் தட்டிய இளைஞர் யார் என்று குழப்பமடைந்த அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பிறகுதான், அது வேறுயாருமல்ல, பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் என்று தெரிந்திருக்கும்.
நிதிஷ் குமார் தில்லி சென்றிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முழுக்க மாநில நிர்வாகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த தேஜஸ்வி இந்த திடீர் சோதனையையும் முயற்சித்துப் பார்த்தார்.
பிகார் மாநில சுகாதாரம் மற்றும் சாலை கட்டமைப்பு, ஊரக மேம்பாடு உள்ளிட்ட துறைகளை நிர்வகிக்கும் யாதவ், முதற்கட்டமாக, பாட்னாவில் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளை கடந்த சில நாள்களாக நேரில் பார்வையிட்டார்.
இந்த நிலையில்தான், நள்ளிரவில் மருத்துவமனைகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்திய தேஜஸ்வி யாதவுக்கு இளைஞர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க.. என்ன ஆனது நித்யானந்தாவுக்கு? இலங்கைக்கு பறந்த அவசரக் கடிதம்
திரைப்படங்களில் பார்ப்பது போல, துணை முதல்வரே நேரடியாக நோயாளியைப் போல மருத்துவமனைக்குள் நுழைந்து, மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்களா, சுகாதாரம் பேணப்படுகிறதா, மருந்துகள் கிடைக்கிறதா என அலசினார். ஆனால், அவருக்குக் கிடைத்தது பல இடங்களில் இல்லை என்ற பதிலே.
தலையில் தொப்பியும் முகக்கவசமும் அணிந்து கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்த தேஜஸ்வியை முதலில் யாராலும் அடையாளம் காணமுடியவில்லை. உண்மை நிலவரம் தெரியும்வரை அவரும் தன்னை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
மருத்துவமனைகளில் நிலவும் அவல நிலையை துணை முதல்வர் நேரடியாகப் பார்த்துவிட்டு, பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள், ஊழியர்கள் போதுமான அளவில் இல்லாதது தொடர்பாகவும் அறிந்து கொண்டார்.
அனைத்து இடர்களையும் குறிப்பெடுத்துக் கொண்ட துணை முதல்வர், விரைவில் துறை ரீதியாகக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நிதீஷ் குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தவரை, சுகாதாரத் துறையை பாஜகவே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.