150 நாள்கள் கண்டெய்னரில் தங்கவுள்ள ராகுல் காந்தி: குமரி முதல் காஷ்மீர் வரை..

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டெய்னரில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
150 நாள்கள் கண்டெய்னரில் தங்கவுள்ள ராகுல் காந்தி: குமரி முதல் காஷ்மீர் வரை..

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டெய்னரில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் கடந்த இரண்டு முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததுடன், பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்து வருகிறது. காங்கிரஸில் உள்ள மூத்த தலைவா்கள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனா். இந்த நிலையில், கட்சி இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் வகையில் ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளாா்.

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் (பாரத் ஜோடோ யாத்) கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை தொடங்குகிறது. இந்த நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுலிடன் அளிக்கிறார்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 148 நாள்கள் பயணம் செய்கின்றனர்.

இந்த பயணத்தின்போது ராகுல் காந்தியோ, கட்சியின் மூத்த தலைவர்களோ எந்தவொரு நட்சத்திர விடுதிகளிலும் தங்கவில்லை. மிகவும் எளிமையான நடைப்பயணமாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைப்பயணம் செல்பவா்கள் தங்குவதற்காக 60 கண்டெய்னர்கள்(கேரவன் வேன்கள்) தயாரிக்கப்பட்டு குமரிக்கு ஏற்கெனவே அனுபப்பட்டுவிட்டது. இதில், ராகுல் காந்தி தனி கண்டெய்னரிலும், மீதமுள்ள 118 நிர்வாகிகள் இதர கண்டெய்னரிலும் தங்கவுள்ளனர்.

இவர்களுக்கான உணவும் கண்டெய்னரில்தான் தயாரிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு கண்டெய்னரிலும் கழிவறை, படுக்கைகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில கண்டெய்னரில் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம். பிறகு மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம். இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப். 10 வரை மொத்தம் 56 கி.மீ., கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

வருகின்ற 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் இந்தாண்டு இறுதியில் ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த புதிய முயற்சியை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com