ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி அணிந்திருந்த ஆடை குறித்து பாஜக தெரிவித்த கருத்துக்கு இணையவாசிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் ஒற்றுமையை வலியுறுத்தியும், பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி பாரதத்தை இணைப்போம் எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடைபயணத்தின்போது ராகுல்காந்தி அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையை சுட்டிக்காட்டி அதன் விலையை ரூ.41,257 எனக் குறிப்பிட்டு “பாரதமே பாருங்கள்” என பாஜக டிவிட்டரில் விமர்சித்திருந்தது.
இதையும் படிக்க | பிரிட்டன் அரசி மறைவு: செப்.11இல் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிப்பு
இதனைக் குறிப்பிட்டு இணையவாசிகள் பாஜகவை கிண்டலடித்து வருகின்றனர். இதுதொடர்பாக இணையவாசிகள் பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட்சூட்டின் படத்தைப் பகிர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆடையை பிரதமர் அணியலாமா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தனது சொந்தப் பணத்தில் இந்த ஆடையை வாங்கியிருக்கும் ராகுல் காந்தியை விமர்சிக்கும் பாஜக மக்கள் பணத்தில் பிரதமர் மோடிக்கு அதிக விலைக்கு கோட் சூட் வாங்குவது ஏன்? என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பாஜகவின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்தியாவை ஒருங்கிணைப்போம் யாத்திரைக்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து பயமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவராகிறேனா? ராகுல் காந்தி பதில்
மேலும் “வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளைப் பற்றி பேசுங்கள். ஆடைகளைப் பற்றி பேசவேண்டுமென்றால் மோடியின் ரூ.10 லட்சம் மதிப்பிலான கோட் சூட் குறித்தும், ரூ1.5 லட்சம் மதிப்பிலான கண்ணாடி குறித்தும் விவாதிக்கலாம். எதை விவாதிக்க வேண்டும் எனத் தெரிவியுங்கள்” என காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.