காங்கிரஸ் தலைவராகிறேனா? ராகுல் காந்தி பதில்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ராகுல்காந்தி பதிலளித்துள்ளார். 
ராகுல்காந்தி
ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ராகுல்காந்தி பதிலளித்துள்ளார். 

நாடு முழுமைக்குமான ஒற்றுமையை வலியுறுத்தியும், மோடி அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். 

இதன் மூன்றாவது நாளான இன்று தக்கலை நோக்கி அவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடைபயணத்தின் மத்தியில் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த நடைபயணம் எங்களை மக்களுடன் இணைக்கும். நாட்டை பாதிக்கும் பாஜகவின் மோசடி கொள்கைகளுக்கு எதிராக இந்த யாத்திரையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் 2000 ஆண்டுகளாக இருவேறு கொள்கைகளுக்கிடையே நடக்கும் சண்டை இது. இது தொடரும். இந்தியாவில் இரண்டு கொள்கைகள் இயங்கி வருகின்றன. ஒன்று அனைவரையும் அடக்கி ஒடுக்கும் கொள்கை. மற்றொன்று வெளிப்படையானது. இந்த மோதல் தொடர்ந்து நடைபெறும். பாஜக அனைத்து நிறுவனங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவற்றின் மீது அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அரசியல் கட்சியாக மட்டும் நாங்கள் சண்டையிடவில்லை. இந்தியாவின் அரசியல் கட்டமைப்பிற்கும் அதனை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை இது” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் மூலம் மட்டுமே தலைவர் பதவி நிரப்பப்படும். நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். எனது மனதில் எவ்வித குழப்பமும் இல்லை” எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com