குழந்தை திருமணத்தை தடுக்க யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து மேற்கு வங்க அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் நலனுக்கான சங்கங்கள் உருவாக உள்ளன.
குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்படும் இந்த சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பதும் மற்றும் பதின் பருவத்தில் குழந்தைகள் கருவுறுதலைத் தடுப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
குழந்தை திருமணம் மற்றும் பதின் பருவத்தில் குழந்தைகள் கருவுறுதல் ஆகிய இரு பிரச்னைகளை தடுப்பதற்காக மாநிலத்தில் உள்ள 23 மாவட்டங்களிலும் அடுத்த 6 மாதத்தில் 110 குழந்தைகள் நல சங்கங்கள் உருவாக்கப்பட உள்ளன. சுய உதவி குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் துயரத்தினைப் போக்கவும், அவர்களது குடும்பத்தின் நலனுக்காகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஒவ்வொரு வருடமும் விராட் கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கை
அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கையில், குழந்தை திருமணம் மற்றும் பதின் பருவத்தில் கருவுறுதல் பட்டியலில் மேற்கு வங்கம் முன்னிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் 20 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 41.6 சதவிகிதம் பேருக்கு அவர்களது பதின்மப் பருவத்தில் திருமணம் ஆகியுள்ளது தெரிய வந்தது. அதில் 16.4 சதவிகிதம் பேர் அவர்களது பதின்மப் பருத்தில் தாய்மை அடைந்துள்ளதாகவும் அந்தத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க மாநில அரசு யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் குழந்தைகள் நல சங்கம் குழந்தைத் திருமணம் மாநிலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும். இதன்மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல் நலம் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.