லக்னௌ: லக்னௌவில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னௌவில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர். வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | கரோனாவை வென்ற முதியவா்களை அச்சுறுத்தும் மறதி நோய்!
இந்த சம்பவம் குறித்து காவல்துறை இணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பியூஷ் மோர்டியா கூறியதாவது:
சுவர் விழுந்து உயிரிழந்தவர்கள் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே குடிசைகளில் வசித்து வந்தவர்கள். கனமழை காரணமாக ராணுவ வளாகத்தின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் இந்த உயரிழப்பு நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து அதிகாலை 3 மணிக்கு நிகழ்விடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒன்பது உடல்களும் வெளியே எடுக்கப்பட்டது. மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார் என்று பியூஷ் மோர்டியா கூறினார்.
நிதியுதவி: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.