பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி லட்சக் கணக்கான தாய்மார்கள் தன்னை ஆசீர்வதித்து வருவதாகவும், பெண்கள் தனது பலம் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 72-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு நாடு முழுவதும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் எட்டு சிறுத்தைகள் நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. 8 சிறுத்தைகளும் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ளன.
பின்னர், ஷியோபூர் நகரில் நடந்த சுயஉதவிக் குழுக்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது,
பொதுவாக என் பிறந்தநாளில் நான் எனது தாயாரை சந்தித்து அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவேன். ஆனால் இன்று என்னால் அவரிடம் செல்ல முடியவில்லை. மாறாக மத்தியப் பிரதேசத்தின் பல தாய்மார்கள் என்னை ஆசீர்வதித்துள்ளனர் என்றார்.
கடந்த நூற்றாண்டைவிட, இந்த நூற்றாண்டில் பெண்கள் பிரிதிநிதித்துவத்தில் பெரிய வேறுபாடு உள்ளது.
இந்த நூற்றாண்டில் உள்ளாட்சி முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை பெண்கள் கொடிகளை உயரமாகப் பறக்க விடுகின்றார்கள். அனைத்து தாய்மார்களும், சகோதரிகளும் எனது பலம் மற்றும் உத்வேகம் என்று அவர் பேசினார்.