ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறி பிரதமரும், பாஜகவும் ஆம் ஆத்மியினை அழிக்க முயற்சி செய்வதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தால் பாஜக தொடர்ந்து ஆம் ஆத்மியினை குறி வைத்துத் தாக்கி வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 60 வயது 'ஸ்பைடர் மேன்'! கயிறு இல்லாமல் கட்டடம் ஏறி அசத்தல்
தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி பிரதிநிதிகளுக்கான முதல் தேசிய அளவிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கேஜரிவால் இதனை தெரிவித்தார். மேலும், ஆம் ஆத்மியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை மோடி தலைமையிலான அரசு ஊழல் புகாரில் சிக்க வைக்க முயற்சிக்கிறது எனவும், ஆம் ஆத்மியின் வளர்ச்சியைத் தடுக்க பாஜக முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: “ பாஜக குஜராத் தேர்தல் குறித்த அச்சத்தில் உள்ளது. ஆம் ஆத்மியின் செல்வாக்கு பெருகி வருவதால் பாஜக அச்சத்தில் உள்ளது. பிரதமரின் ஊடக ஆலோசகர் ஹிரன் ஜோஷி குஜாரத்தில் உள்ள ஊடகங்கள் ஆம் ஆத்மி குறித்த நிகழ்வுகளை ஒளிபரப்பக் கூடாது என மிரட்டியுள்ளார். அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தி குறித்து ஊடக நண்பர்கள் பலர் என்னிடம் பேசியுள்ளனர். நான் ஜோஷியிடம் ஒன்றுதான் கூற விரும்புகிறேன். யாரேனும் ஒருவர் அந்த குறுஞ்செய்தியினை புகைப்படம் எடுத்து வெளியிட்டால் உங்களது உண்மையான முகம் மக்களுக்குத் தெரியும்.” என்றார்.