ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே கூறியதாவது:
கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பேருந்து, தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் ஒரு பாலத்தின் தடுப்புப் பகுதியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே இறனந்தனர். மேலும், 4 பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதர் மருத்துவமனையில் இறந்தனர். இன்னும் சில பயணிகள் பேருந்தில் சிக்கியிருப்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
விபத்தில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (ஆர்ஐஎம்எஸ்)க்கு அவர்களை அனுப்புவதற்கான பணிகளுக்கு தயாராகி வருகிறோம்,'' என்றார்.
ஆற்றின் நடுவில் பேருந்து தண்ணீரில் விழுந்திருந்தால் சேதம் அதிகமாக இருந்திருக்கக் கூடும் என்று கூறினார்.
இதையும் படிக்க | ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி
"இன்னும் சில பயணிகள் பேருந்தில் சிக்கியுள்ளதால், அவர்களை எரிவாயு கட்டர்களின் உதவியுடன் பேருந்தின் பகுதிகளை வெட்டி எடுத்து அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், மீட்புப் பணிகளைக் கண்காணிப்பதற்காக டிஎஸ்பி நிலையிலான அதிகாரி மற்றும் மூன்று காவல் நிலையப் பொறுப்பாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
இந்நிலையில், ததிஜாரியாவில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் உயிரிழந்தது வேதனையாக உள்ளது.
முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல்: இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனில் நிழலில் இளைப்பாறட்டும், அவர்களின் குடும்பத்தினருக்கு துயரத்தை தாங்கும் சக்தியையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என சோரன் தெரிவித்துள்ளார்.